சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என
அறியப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி
பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு
முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி
ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும். அவர்கள், கருங்கடல்
பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில்
இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி
கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால்
மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது. கருங்கடலில் இருந்து
வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது.
அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா'
என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து
வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள்
கிடைத்துள்ளன. இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம்,
ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத
மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும்
சொல்லியல் ஆகியவைகளை ஆராயும்போது, மேற்கூறிய ஆறு
மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின்
கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம்
துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.
உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும்
வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம்.
இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்'
(Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின்
மொழியில் 'மதேரி' (Materi) எனவும்
அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள
ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய
மொழிகளின் வேர்ச்சொல்லான 'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து
பிறந்தவை.
இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European
languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும்
150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும்
மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும்.
இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய
மொழி,பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம்,
ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி,
உருது என்பனவும் அடங்குவன.
அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன்
மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி
தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும்,
இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).
இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின்
தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது. உதாரணம்: 'UPPER' எனும்
ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என
பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.
மேலும், தமிழுடன் ஒப்பிடும்போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள்
மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய
மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில்
இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.
இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின்
பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே
ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால
இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக,
பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000
ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000
ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ்
மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.
இந்த கண்டுபிடிப்புகள் மொழி
வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர்
அட்கின்சன் தெரிவித்துள்ளார்.