1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத்
தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன்
மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும்
அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது
பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால்
இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு
மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ
காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி
உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக
வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம்
படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு
ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).
தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - ஜப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.
1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் ஜப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-ஜப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்- ஜப்பானிய மொழி உறவு பற்றிஜப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.
ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை ஜப்பானில் உள்ள
இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர்
தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும்
இணைந்து தமிழ்- ஜப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி
நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு ஜப்பான்
திரும்பினார்.
தமிழ் ஜப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் ஜப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் ஜப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது. ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் ஜப்பான் என்.எச்.கே நிறுவனம் ஜப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.
தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல்
ஜப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த
நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.
தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது
என்று உணர்ந்ததே ஜப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய
ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத்
தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ்
ஜப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட
ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள்
இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய
மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய
மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக்
காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய
மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள்
சிறப்புடையனவாகும்.
ஓனோ அவர்கள் தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.
தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை
இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க
இலக்கியங்கள் போலச் ஜப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு
தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் ஜப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல்
இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை
உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(எ.கா)
நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர
எனச் சொல் ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள் ஜப்பானிய அரசின் பரிசும்
பாராட்டும் பெற்றவர்.
இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் ஜப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் ஜப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் ஜப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார். 1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது ஜப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் ஜப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் ஜப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.
தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். ஜப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின. இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.
சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற
வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக
அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய
உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற
பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் ஜப்பானிய
மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப்
பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு. 1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல்
மற்றும் மொழியியல் அறிஞர்களைச் ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ் ஜப்பானியமொழி உறவு
பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் அகத்தியலிங்கம்,
செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர்
இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி
சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர்.
இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் ஜப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் ஜப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச்
ஜப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.
தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத்
தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு
அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ்
மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு
சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89
ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை
டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.
டிஸ்கி 1 : இதுபற்றி ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை
டிஸ்கி 2 : சொற்கள், இலக்கணம், பொங்கல் திருவிழா,
பெண்பார்க்கும் முறை என எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய் இருப்பதை
வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது. நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதில்
நகைச்சுவை என்னவென்றால் இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன் பெருமைகளைப்
போற்றியவர்கள் வேற்றுமொழிக்காரர்களே!
அருமை
பதிலளிநீக்குநாளை 11-11-2019 சென்னைப் பல்கலைக் கழகத்திவ் இது குறித்து பேசுகிறேன்
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ டறணன