தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


ஒரு கிராமத்தில் அப்பாசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.மூத்தவன் பெயர் கணேசன். இளையவன் பெயர் வேலு. இருவரும் அந்த ஊரிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கணேசன் எட்டாவதும், வேலு ஆறாவதும் படித்து வந்தனர்.

கணேசனுக்குத் தன் தம்பி வேலுவின் மேல் மிகவும் பிரியம். அதனால் அவன் செய்யும் சிறு தவறுகளை எப்போதும் சமாளித்து விடுவான்.
மற்றவர் தன் தம்பியை ஏதும் குறை கூறிவிடக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பான்.ஆனால் இதை சற்றும் உணராத வேலு எப்போதும் தன்னையே கவனிக்கும் தன் அண்ணன்மேல் கோபப் படுவான்.ஆனாலும் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை கணேசன். தம்பி யாருடன் பேசுகிறான், எங்கே வெளியே போகிறான் அவன் நண்பர்கள் யார் யார் என கவனித்துக் கொண்டிருப்பான்.

ஒருமுறை வேலுவின் மீது பொறாமை கொண்ட துஷ்டப் பையன் கோபி வேறு ஒரு பையனின் புத்தகத்தைத் திருடி வேலுவின் பைக்குள் வைத்துவிட்டான்.வீட்டுக்கு வந்த வேலுவின் பையிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கணேசன் உடனே சைக்கிளில் போய் அந்தப் புத்தகம் யாருடையதோ அந்தப் பையனிடமே கொடுத்துவிட்டு வந்தான்.

மறுநாள் கோபி தன் எதிரி வேலுவுக்குத் திருட்டுப் பட்டம் கட்ட முடிய வில்லையே என வருந்தினான். இந்தச் செய்தியை வேலுவின் நண்பன் சொன்னபோது வேலு திகைத்தான். அந்தப் புத்தகம் என்னிடம் இருப்பதை ஆசிரியர் பார்த்திருந்தால் நான் தான் திருடன் என நினைத்திருப்பாரே. நல்லவேளை புத்தகம் என்னிடம் இல்லாதது நல்லதாய்ப் போயிற்று என எண்ணியவன் இது எப்படி நடந்திருக்கும்? என சிந்தித்தான். ஆனாலும் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் அந்த கோபி தவித்ததைப் பார்த்துச் சிரித்தான் வேலு.

இது எப்படி நடந்தது. வீட்டுக்கு வந்தவனிடம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி கணேசன் கேட்கவே வேலு அவன் தான் புத்தகத்தை எடுத்து நண்பனின் வீட்டில் கொடுத்திருக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.ஆனாலும் வழக்கம் போல என் பையை நீ ஏன் எடுத்தாய்? என்று சண்டைக்கு வந்தான். ஆனால் கணேசன் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.

வேலு அப்பாவிடம் வந்து படிக்க உட்கார்ந்தான்.நடந்த செய்தியை ஏற்கெனவே கணேசு அப்பாவிடம் சொல்லிவிட்டான்.ஆனால் வேலு எதுவுமே நடவாதது போல் திருக்குறளைப் பற்றி அப்பாவிடம் கேள்வி கேட்டான்."

"அப்பா, சான்றாண்மைன்னா என்ன பொருள் அப்பா " என்றான்.

அவனைக் கூர்ந்து பார்த்த அப்பா "நாளைக்குச் சொல்கிறேன்."என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

மறுநாள் மாலையில் வேலுவையும் கணேசனையும் கடற்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தார்.ஆனால் கணேசன் எனக்குப் பரீட்சை வருகிறது. நான் படிக்கணும் நான் வரவில்லை என்று சொல்லவே வேலுவை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்கரை சென்று மணலில் அமர்ந்தார் அப்பாசாமி.

தண்ணீரில் விளையாடிக் களைத்தபின் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான் வேலு. அப்போது நாலைந்து மீனவப் பையன்கள் கரையோரமாக ஒலியெழுப்பிய வண்ணம் எதையோ தேடினர். அப்போது வேலுவின் அருகே ஒரு நண்டு பரபரவென்று நடந்து சென்றது.அதன் கால்கள் பதிந்த இடத்தில் ஈரமண்ணில் விதம் விதமான கோடுகள் பதிந்தன.அதைப் பார்த்துக் குஷியில் குதித்தான் வேலு.அடுத்த நொடியில் ஒரு அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துச் சென்றது.இப்படி நண்டு கோலம் போடுவதும் அலைகள் அழிப்பதுமாக இந்த விளையாட்டை ரசித்துப் பார்த்தான் வேலு.

திடீரென்று அந்த மீனவச் சிறுவர்கள் அங்கு வந்து நண்டைப பிடிக்க அதன் வளையைத் தேடினார்கள்.அது சென்ற வழியான கால்தடத்தைத் தேடிப் பார்த்தனர்.எங்கும் தடம் இல்லாதபடி அலைதான் அழித்து விட்டதே.நண்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்தக் காட்சியை வேலுவுக்குக் காட்டினார் அப்பா.

"அவர்கள் எதற்காக வந்தனர் தெரியுமா?"

"நண்டு பிடிக்க வந்தனர்.இல்லையாப்பா?"

"நண்டைப் பிடிக்க முடிஞ்சுதா?"

"அதுதான் வளைக்குள்ளே ஓடி ஒளிஞ்சுடிச்சே"

"அப்படி ஓடி ஒளிய யார் காரணம்?"

"அலை வந்து அதனுடைய கால்தடத்தை அழிச்சுட்டதாலே நண்டு வளையைக் கண்டு பிடிக்க முடியாமே போய்ட்டாங்கப்பா."

"ரொம்ப சரி.அந்த நண்டு நான் போட்ட அழகான கோலத்தை அழிக்கறியே அப்படீன்னு கோபப் பட்டு அலையைத் திட்டியிருக்கும் இல்லையா?"

"ஆமாம்ப்பா"

"அந்த அலையும் ரோஷப் பட்டு நண்டின் கால்தடத்தை அழிக்காமே விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்?"

"ஐயோ,அந்தப் பையன்கள் வளையைக் கண்டு பிடிச்சு நண்டைப் பிடிச்சிருப்பாங்களே "

"இப்போ அந்த நண்டு என்ன நினைக்குது தெரியுமா? தன உயிரைக் காப்பாத்தின அலைகிட்டப் போயி என்ன சொல்லும்?"

"அந்த அலைகிட்டே மன்னிப்புக் கேட்குமா அப்பா?"

"இன்னும் அது மன்னிப்புக் கேட்கலையே."

"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"நீதான் அந்த நண்டு.உன் அண்ணன்தான் அந்த அலை.அவன் செய்யும் ஒவ்வொரு உதவியையும் அந்த நண்டைப் போல நீ தப்பாக நினைத்து கோபப் படுகிறாய் இல்லையா?"

வேலு தன் தவறை இப்போது உணரலானான்.அண்ணன் செய்யும் ஒவ்வொரு செயலும் தன்னைப் பாதுகாக்கவே என்பதை அவன் புரிந்து கொண்டான்.

"நீ உன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டால்தான் அந்த நண்டும் மன்னிப்புக் கேட்கும்.அந்த அலையும் மகிழ்ச்சியடையும்."

"இனிமே நான் அண்ணன் கூட சண்டை போடா மாட்டேம்பா .அண்ணன் ரொம்ப நல்லவம்ப்பா "

"நீ கேட்டியே சான்றாண்மைன்னா என்னப்பான்னு? அதுக்குப் பொருளே உங்கண்ணன் தான் வேலு."

"எனக்குப் புரியலப்பா."

"சொல்றேன்.

"நம்ம திருவள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருக்கிறார்."

"கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு."

"அப்படின்னா என்னப்பா?"

"சொல்றேன். நம்ம கடமை இதுன்னு தெரிஞ்சு அதை நல்ல முறையிலே செய்து முடிக்கிறதுதான் நம்ம கடமைன்னு இருக்கிறவங்களை சான்றோர்னு சொல்வாங்க.உங்கண்ணன் உனக்கு எப்பவும் நல்லதே செய்யறானே அவன் சான்றோன் தானே?"

"ஆமாம்ப்பா. சான்றாண்மைன்னா நல்ல குணங்கள் இருக்கிறவங்கன்னு சொல்லலாம் இல்லையா?"

"சரியாப் புரிஞ்சிகிட்டே வேலு.நாம கடற்கரைக்கு வந்தவேலை முடிஞ்சுடுச்சு. வா போகலாம்."என்று எழுந்தார் அப்பாசாமி.

அவருடைய கையைப் பற்றிக் கொண்டு மனம் நிறைய அண்ணனின் அன்பைப் பற்றி எண்ணிக் கொண்டு வாயில் கணேசண்ணே , கணேசண்ணே என்றபடியே அவருடன் நடந்தான் வேலு.

---ருக்மணி சேஷசாயி


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -