பெருமன்னன்
ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு
சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது
நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான்.
முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில்
மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக்
கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய
நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன். நீ
ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன்
பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார்.
பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக;
நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள்
என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல
இசைந்தார்.
அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு
பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன்
முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று,
இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும்
நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.
இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே
செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள்
எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான்.
முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்?
நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார்.
அன்பு வெளிப்படும் முறை இதுவன்று.
இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும்
வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?