தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


தண்டனை என்ற பெயரில் கழுத்தை வெட்டி கொல்லும் இரக்கமற்றவர்களை அனைவரும் பார்க்கட்டும் 

கலங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை

அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.

சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார், பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.

அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.

அவள் பெயர், ரிசானா நஃபீக்

ரிசானா நபீக்.
அவள் இலங்கையைச் சேர்ந்தவள். இசுலாமியத் தமிழ்ப் பெண். கிழக்கு இலங்கையில் இருக்கும் மூதூர் கிராமத்தில் ஒரு ஏழை முசுலீம் குடும்பத்தில் பிறந்தவள். 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அவள் தந்தையின் வருமானம் நின்று போகிறது; குடும்பம் வறுமையின் பிடியில் சிக்குகிறது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் சிறுமி எனப் பெயர் வாங்கியிருந்த ரிசானா, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் போக்க வெளிநாட்டுக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதாக வீட்டாரிடம் தெரிவிக்கிறாள். அது 2005-ம் ஆண்டு.

1988 பிப்ரவரி மாதம் பிறந்தவளான ரிசானாவுக்கு அப்போது 17 வயது தான் ஆகியிருந்தது. பிழைக்க வேறு வாய்ப்புகள் இல்லாத அக்குடும்பத்தை அணுகும் இடைத்தரகன் ஒருவன், ரிசானாவின் பிறந்த தேதியை 02-02-1982 என்பதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனடிப்படையில் கடவுச் சீட்டும், சவுதியில் வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வாங்கித் தருகிறான். 2005 மே 4-ம் தேதி ரிசானா சவுதி செல்கிறாள். சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாதமீசா எனும் பகுதியைச் சேர்ந்த பணக்கார சவுதி ஷேக் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.

வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது உள்ளிட்ட வேலைகளோடு மூன்று மாதங்களே நிரம்பியிருந்த ஷேக்கின் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் கவனித்து வருகிறாள். அதே மாதம் 22-ம் தேதி 17 வயதே நிரம்பியிருந்த ரிசானாவின் பொறுப்பில் தனது மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே செல்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. முன்பின் அனுபவமில்லாத ரிசானா, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டுகிறாள். சற்று நேரத்தில் அக்குழந்தைக்குப் புரையேறி மூக்கிலிருந்து பால் வடிகிறது. என்ன நேர்ந்தது என்பதை உணராத ரிசானா, குழந்தைக்கு நீவி விடுகிறாள். குழந்தை தூங்கி விட்டதாகக் கருதிக் கொண்டு வேறு வேலைகளில் மூழ்குகிறாள்.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வரும் எஜமானி, குழந்தை இறந்து போயிருப்பதை காண்கிறாள்  ரிசானாவை அடித்துத் துன்புறுத்துகிறாள். தொடர்ந்து காவல் துறையிடம் கையளிக்கப்படும் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ரிசானா மொழி தெரியாத நாட்டில், நண்பர்களோ உறவினர்களோ இல்லாத சூழலில் ஒரு கொலைப்பழியை எதிர் கொண்டு நிற்கிறாள். போலீசாரும் கண்மண் தெரியாமல் அடித்து வாக்குமூலம் கேட்கிறார்கள்  தமிழ் மட்டுமே அறிந்திருந்த ரிசானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கிறார்கள். அடி பொறுக்க முடியாமலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் (சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள்) மொழிபெயர்த்துச் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமலும், அரபி மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலப் பத்திரத்தில் எழுதப்பட்டது என்னவென்று அறியாமலும் அதில் கையொப்பமிடுகிறாள் ரிசானா.

வழக்கு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுகிறார். ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுக்கிறாள். அரபு தேசத்தில் நடந்த அந்த விசாரணையில், அரபிக் குடும்பம் தொடுத்த வழக்கில், தனது தரப்பில் வாதாட யாருமே இல்லாமல் ரிசானா நிர்கதியாக நின்ற நிலையில், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்னவென்பதையே புரிந்து கொள்ள முடியாமல் ரிசானா தவித்துக் கொண்டிருந்த நிலையில், அரபு போலீசார் முன்வைத்த ஆதாரங்கள் மற்றும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடந்த அந்த ஒரு தலைப்பட்சமான விசாரணைகளின் முடிவில் அவளுக்கு ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அது 2007-ம் ஆண்டு ஜூன்மாதம்.

2005-ம் ஆண்டு மே மாதத்திலிருந்தே சிறையிலடைக்கப்பட்ட ரிசானாவின் நிலை சுமார் ஓராண்டு காலம் வெளியுலகுக்கே தெரியவில்லை. அவளது வீட்டாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. ஹாங்காங்கைத் தலைமையகமாய்க் கொண்டு செயல்படும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தான் முதலில் இதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் இது சர்ச்சைக்குள்ளாகி விட்டிருந்த நிலையில், இலங்கையிலும் மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், இலங்கை அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரிசானாவை விடுதலை செய்யக் கோருகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கூட மக்கள் போராட்டங்களுக்காக கொஞ்சம் மனமிறங்கி சவுதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்புகிறார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு மேற்குலகின் பிரபலங்களும் ரிசானாவை விடுவிக்க வேண்டுமென்று கோருகிறார்கள்.

குழந்தையின் பெற்றோர் இறந்த தமது குழந்தைக்கு பதிலாக ரிசானாவிடமிருந்து குருதிப் பணம் பெற்றுக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தால், ஷரியா (ஷரியத்) சட்டப்படி அவள் சிரச்சேதத்திலிருந்து தப்ப முடியும் என்று ஷரியா சட்டம் கூறுகிறதாம். உடனே, சவுதி இளவரசர் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதெல்லாம் மரண தண்டனையை தவிர்ப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று சவுதி அரசு கூறுபவை.

ரிசானாவின் உறவினர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் அந்தப் பெற்றோருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களும் மன்றாடல்களும், அல்லாவிடம் செய்யப்பட்ட துஆக்களும் ரிசானா மீண்டும் ஊர் திரும்புவாள் என்று வைத்த நம்பிக்கைகளும் பயனற்றுப் போயின. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:40க்கு ரிசானாவின் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது. காண்போர் பதைபதைக்க அல்லா அருளிய ஷரியத் சட்டப்படி பச்சையாய்ப் படுகொலை செய்யப்பட்டாள்.




காணொளியின் காட்சி







.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -