- Back to Home »
- ஈழம் »
- "வீழ்ந்து கிடக்கும் தமிழர் தாயகத்தை எடுத்து நிறுத்த வல்லார் யார் உளர்".
Posted by : தமிழ் வேங்கை
அந்த மண்ணை ஒவ்வொரு கணமும் மிதித்துச் செல்லுகின்றன.
எத்தனை முயற்சி எடுத்தாலும் வாழ்வின் அடிமட்டத்திற்கே போய்விட்ட நமது தாயகத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை நிமிர்த்த முடியாமல் அந்த மண் தவிக்கின்றது.
போராட்ட காலத்தில் எதிரியின் ஆயுதங்கள் அந்த மண்ணிலும் ஆகாயத்திலும் தங்கள் கொடிதான தாக்குதல்களை நடத்தியபோதும் கூட காவலர்களாக இருந்த விடுதலைப் புலிகளின் பலம் அந்த மக்களை காத்து வந்தது. ஆனால் இன்று அந்த மண்ணில் மக்களை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியாமல் அவர்கள் தடுமாறுகின்றார்கள்.
ஒரு பக்கம் சிங்கள இராணுவச் சிப்பாய்களின் கொடிதான நடவடிக்கைகள். கேட்பதற்கு எவருமில்லாத அந்த மக்களை குறிவைக்கும் சீருடைக் காடையர்களின் கொடுமைகளிலிருந்து தப்புவதா அல்லது தங்கள் வாழ்க்கையை மீண்டும் சிறிது சிறிதாக நிமிர்த்துவதா என்று தெரியாமல் தடுமாறும் அந்த மக்களை காப்பாற்றுவதற்கு அதிகாரங்களை ஓரளவு கொண்டுள்ள தமிழ் பேசும் கூடடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இயலாமல் உள்ளது என்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான தாக்கமுள்ள ஒரு மண்ணில் நமது மொழியும் மக்களும் தவிக்கும் நிலை கண்டு நமது மனம் நொந்து போயுள்ளது. என்ன செய்ய முடியும் என்ற தயக்கம் நம்மை வாட்டியபடி உள்ளது.
இதேவேளையில்தான் அண்மையில் நாம் சென்னை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் அவர்கள் எழுதிய நூலொன்றை படிக்க நேர்ந்தது.
“தமிழா எழுந்து வா” என்ற அந்த சிறு நூலில் மாபெரும் சிந்தனைகளைத் தரவல்ல கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. மேற்படி நூலில் அறவாணன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.
“ஒரு மொழியின் வாழ்வு அம்மொழியை மட்டும் பொறுத்ததில்லை. அந்த மொழியை பேசும் மக்களை அனுசரித்தே அது வாழும், வளரும். ஒரு மொழிக்கு பழமை, இலக்கியச் செழுமை முதலியன இல்லாமல் இருந்தால் கூட அந்த மொழியை பேசும் மக்கள் உயர் நிலையில் இருந்தால் அந்த மொழியும் உயர் நிலையை அடையும். ஜப்பானிய மொழிக்கு தமிழைப் போன்ற பழமை இல்லை.
இலக்கிய மற்றும் இலக்கண வளம் இல்லை. ஆனால் ஜப்பான் மொழியைப் பேசும் மக்கள் மிகவும் சுறுசுறுப்பான மக்கள். உழைக்கும் திறன் கொண்டவர்கள். தளராத மனம் கொண்டவர்கள்.
எனவேதான் 1945ம் ஆண்டு ஜப்பானிய நகரங்களான ஹிரோசிமா, நாகசாகி போன்றவைகளை அமெரிக்கர் குண்டு வீசி அழித்த போது, அழிந்து சாம்பரான நகரங்களையும் தங்களை நாட்டையும் இருபத்தைந்தே ஆண்டுகளில் எடுத்து நிமிர்த்தினார்கள். எனவே இதிலிருந்து ஒன்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மொழிக்குரிய பெருமையை அந்த மொழியைப் பேசும் மக்களே தீர்மானிக்கின்றனர். இதை மனதில் கொண்டு கீழ் நிலையில் உள்ள தமிழ் மக்களை தமிழர்களே எடுத்து நிறுத்த வேண்டும்”
மேற்படி திரு அறவாணன் அவர்கள் தெரிவிக்கும் கருத்தை நாம் இந்த வாரம் நமது கதிரோட்டத்தின் உயிர்நாடியாகக் கொள்ள விரும்புகின்றோம்.
வீழந்து கிடக்கும் நமது தாயக மண்ணையும் அந்த மக்களையும் எடுத்து நிறுத்துவதற்கு நாம் தயாராக உள்ளோமா? என்ற கேள்வியை நாம் நம்மிடமே கேட்போம்.
வீழ்ந்து கிடக்கும் வன்னி மண்ணின் மக்;களை நாம் காப்பாற்றி அந்த மண்ணை நாம் எடுத்து நிறுத்த என்ன செய்கின்றோம்? அந்த மக்களின் அடிப்படையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நாம் செய்யும் உதவிகள் தாராளமானதாக உள்ளதா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கிவரும் தமிழர் அமைப்புக்கள் யாருக்கு பலம் அதிகம் என்பதை நிரூபிப்பதிலேயே அதிக கவனமெடுத்து வருகின்றன.
ஈழத்தமிழர்களின் தாயகம் அந்த வன்னியையும் அதனைச் சார்ந்த இடங்களையும் தமது வாழ்விடங்களாகக் கொண்டு தங்கியுள்ள மக்களின் நல்வாழ்விற்காக சில திட்டங்களை புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து நாம் மேற்கொள்ளுவது என்பது மிகவும் சிரமமான விடயமாகவே உள்ளது.
மறுபக்கத்தில் இலங்கையில் அரசாங்கத்திற்கு துணையாக உள்ள தமிழர் கட்சிகள் கூட அங்கு தமிழ் மக்களுக்காக விமோசனத்தை அரசாங்கத்திடமிருந்த பெற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணமே அற்றவர்களாகவே உள்ளார்கள்.
தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி அரச சபைகளில் பேசுவதே அரசாங்கத்திற்கும் அதன் தலைமைக்கும் பிடிக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அடக்கியே “வாசிக்கின்றார்கள்”
இதற்கு நல்ல உதாரணமாக அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "திவிநெகும' சட்டவரைவு 107 மேலதிக வாக்குகளால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தினால் தமிழ் மக்கள் அதிகம் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பதை அறிந்திருந்தும், தமிழ் மக்களை பிரதிநிதித்தும் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் சட்டவரைவை ஆதரித்ததுடன், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடும் விருந்துகளிலும் பங்கெடுத்துள்ளன.
இவற்றை நோக்கும் போது தங்கள் சுய தேவைகளுக்காக அரசாங்கத்தோடு ஒட்டியிருந்த வண்ணம் தமிழர்களின் நலன்களைக் கூட இல்லாமல் செய்யும் அரசியல்வாதிகளின் இயலாமையால் தமிழும் தமிழர் தாயகமும் வெட்கித் தலை குனிய வேண்டித்தான் உள்ளது.
வீழ்ந்து கிடக்கும் நமது மக்களையும் மொழியையும் இவ்வாறானவர்கள் காப்பாற்றுவார்கள் அல்லது நிமிர்த்துவார்கள் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது
எவ்வாறு இருந்தாலும் இந்த விடயத்தில் நமது புலம் பெயர் மக்களும் அமைப்புக்;களும் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய தேவைகள் பல உள்ளன என்பதை நாம் அனைவரும் உணர்ந்த செயற்பட வேண்டிய காலம் நெருங்கி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.